Saturday, March 30, 2013

வின்செண்ட் வான் கோ - வரலாற்று நாயகர்!

தங்கள் வாழ்நாளில் இன்னல்களையும், சிரமங்களையும் சந்திக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இன்னல்களைத்தாண்டி சாதிப்பவர்களைத்தான் வரலாறும் நினைவில் வைத்துக்கொள்ள விரும்புகிறது. இன்னல் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தால் பரவாயில்லை ஆனால் இன்னலே வாழ்க்கையாக இருந்தால் எப்படியிருக்கும்? நாம் தெரிந்துகொள்ளவிருக்கும் வரலாற்று நாயகர் அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவர். வாழ்ந்தபோது அவரது திறமையை துச்சமாக மதித்த உலகம் அவர் மறைந்து 100 ஆண்டுகளுக்கு பிறகு அவரது திறமையை மற்ற கலைஞர்களுக்கு அளவுகோலாக பயன்படுத்துகிறது. அவரது படைப்புகளை போட்டி போட்டுக்கொண்டு வாங்குகிறது. அவர்தான் 'Expressionism' என்ற ஓவியபாணியை உலகுக்கு அறிமுகம் செய்த பத்தொன்பதாம் நூற்றாண்டு ஓவியர் வின்செண்ட் வான் கோ (Vincent Van Gogh). 1853-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் நாள் Groot-Zundert-ல் பிறந்தார் Vincent Willem van Gogh. 

பல வரலாற்று நாயகர்களைப்போல அவரும் ஏழ்மையில்தான் பிறந்தார். அவர் பிறப்பதற்கு முன்பே அவரது குடும்பம் சோகத்தில் மூழ்கியிருந்தது. சரியாக ஓராண்டுக்கு முன்னர் அதே தேதியில் பிறந்த அவரது அண்ணன் சில வாரங்களில் இறந்து போனதுதான் அந்த சோகத்திற்கு காரணம். அந்த மரணத்திற்கு பின் பிறந்ததால் அண்ணனுக்கு வைத்த பெயரையே அவருக்கும் வைத்தனர் பெற்றோர். அவருக்கு விபரம் தெரிய ஆரம்பித்தபோது ஒருவித தாழ்வு மனப்பான்மை ஏற்பட ஆரம்பித்தது. அண்ணன் பெயரை தாங்கியிருக்கிறோம் என்ற நினைப்பு அதற்கு காரணமாயிருந்திருக்கலாம். வான் கோவின் தந்தை ஒரு மதபோதகராக இருந்தார் அதனால் குடும்பத்திற்கு போதிய வருமானம் இல்லை. தாழ்வு மனப்பான்மையும், குடும்ப வறுமையும் வான் கோவை முன்கோபியாகவும், முரடனாகவும் மாற்றியது. தேவலாயத்தில் உபதேசம் செய்யும் தந்தையால்கூட வான் கோவை அடக்க முடியாமல் போனது. 

வான் கோவிற்கு 16 வயதானபோது தொலைவில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைத்தனர் பெற்றோர். ஆனால் அவருக்கு படிப்பின் மீது நாட்டம் இல்லை. எனவே வெளியூரில் ஓவியக்கூடம் நடத்தி வந்த உறவினர் வீட்டிற்கு அவரை அனுப்பி வைத்தனர். அங்கு சென்றபோதுதான் அவருக்கு ஓவியங்கள் மீது ஆர்வம் ஏற்பட்டது. இருந்தாலும் அவரை அரித்து வந்த தாழ்வு மனப்பான்மை மனச்சோர்வாக மாறத்தொடங்கியது. அதனால் வாழ்க்கையில் என்ன செய்வது? என்று தெரியாமல் பலமுறை குழம்பினார் வான் கோ. தந்தையைபோல எளிமையாக மதபோதகர் ஆகலாமா என்றுகூட அவர் யோசித்தார். சுமார் ஓராண்டு Wasmes என்ற நிலக்கரி சுரங்க ஊழியர்களின் கிராமத்தில் அவர் மதபோதனையில் ஈடுபட்டு தன்னைத்தானே வருத்திக்கொண்டு கடும் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். அவரது போதனை முறைகளை ஏற்காத தேவாலாயம் அவரது பதவியை பறித்தது. 

பெற்றோரின் அன்பும், உடன் பிறந்தவர்களின் அன்பும் இல்லாமல் வாழ்க்கையில் எந்தவித பிடிப்பும் இல்லாத அந்த சமயத்தில் அவர் பிழைப்புத்தேடி லண்டனுக்கு சென்றார். அன்புக்காக ஏங்கியதாலோ என்னவோ தாம் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரின் பெண்ணை நேசிக்கத் தொடங்கினார். ஆனால் அவரது காதலை அந்த பெண் ஏற்றுக்கொள்ள மறுக்கவே அவரது சோகமும், மனச்சோர்வும் அதிகமானது. அவரது கவனம் விலைமாதர்களின் பக்கம் திரும்பியது. தனக்கென ஒரு வாழ்க்கை அமைய வேண்டும் என விரும்பிய அவர் அவர்களில் ஒருவரை திருமணமும் செய்து கொண்டார். ஆனால் இல்லற வாழ்க்கை அவருக்கு கொடுமையானதாக அமைந்தது. பல ஆண்டுகள் பொருத்த அவர் கடைசியில் மணமுறிவு செய்துகொண்டார். 

மனதை ஒருநிலைப்படுத்திக்கொண்டு ஓர் ஓவியனாகலாம் என்று முடிவெடுத்தபோது அவருக்கு வயது 33. அப்போதும் அவருடன் கூடவே இருந்தது வறுமை மட்டும்தான். வண்ணமும் தூரிகையும் வாங்குவதற்கு கூட அவரிடம் பணம் இல்லை. தன் சகோதரன் அவ்வபோது கொடுத்த பணத்தைக் கொண்டு காலத்தை ஓட்டிய வான் கோ ஓவியங்கள் வரையத்தொடங்கினார். தன் கவனம் முழுவதையும் ஓவியங்கள் மீது பதித்தார். ஆதிகால குகை ஓவியங்கள், Gatwick ஓவியங்கள். Renaissance ஓவியங்கள், Impressionism ஓவியங்கள் இதுதான் ஓவியங்களின் பரினாமங்களாக இருந்தது. அதில் ஒரு புதிய பரினாமத்தை ஏற்படுத்தினார் வான் கோ. 'Expressionism' என்ற புதியபாணியை அவர் தன் ஓவியங்களில் அறிமுகம் செய்தார். அவருடைய ஓவியங்கள் பளிச்சென்று வண்ணமயமாக இருக்கும். அவர் வரைந்த ஓவியங்களில் உலகப்புகழ் பெற்றது சூரியகாந்தி பூ ஓவியம். 

வான் கோவின் கடைசி ஆறு ஆண்டுகளில் சுமார் 700 ஸ்கெட்ச் ஓவியங்களையும், 800 Oil Paintings எனப்படும் எண்ணெய் ஓவியங்களையும் வரைந்தார். ஆனால் சோகம் என்னவென்றால் அவற்றில் ஒரே ஒரு ஓவியத்தைதான் அவரால் விற்க முடிந்தது. அதுவும் வீட்டு வாடகை கடனுக்காக அந்த ஓவியத்தை வீட்டு உரிமையாளர் எடுத்துக்கொண்டார் என்று கூறுகிறது ஒரு வரலாற்றுக்குறிப்பு. அவரது ஓவியங்களை உலகம் கண்டுகொள்ளாததற்கு அவரது மனச்சோர்வு ஒரு காரணமாக இருந்திருக்கலாம. ஒருமுறை மனச்சோர்வு முற்றியபோது அவர் என்ன செய்தார் தெரியுமா? கத்தியை எடுத்து தனது ஒரு காதை அறுத்துக்கொண்டார். விசித்திரமாக இருந்தாலும் உண்மை. மனச்சோர்வால் எவ்வுளவு ஆழமாக பாதிக்கப்பட்டிருந்தால் அவர் அந்த காரியத்தை செய்திருப்பார். பின்னாளில் காதில் கட்டுபோட்ட மாதிரி தமது உருவத்தையே வரைந்தார் வான் கோ. 

அவரது மனச்சோர்வு அதிகரிக்க அதிகரிக்க அவர் மனநிலை மருத்துவமணைக்கு போவதும் வருவதுமாக இருந்தார். வாழ்க்கை முழுவதும் சோகத்திலேயே வாழ்ந்த அவர் 1890 ஆம் ஆண்டு சோகமான முறையில் தன் வாழ்வை முடித்துக்கொண்டார். அந்த ஆண்டு ஜூலை 27-ஆம் நாள் அவர் துப்பாக்கியால் தன்னைத்தானே நெஞ்சில் சுட்டுக்கொண்டார். இரண்டு நாட்கள் போராட்டத்திற்கு பிறகு அவரது உயிர் பிரிந்தது. வாழ்ந்தபோது அவரது படைப்புகளை மதிக்காத உலகம் அவர் இறந்த பிறகு அவற்றை விலை மதிக்க முடியாதவை என்று கூறுகிறது. 1990-ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற critics ஓவிய ஏலத்தில் வான் கோவின் 'Portrait of Dr. Gache' என்ற ஓவியம் $100 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டது. உலகின் செல்வந்தர்களும், புராதன ஓவியங்களை சேகரிப்பவர்களும் வான் கோ பூர்த்தி செய்யாமல் விட்டுப்போன ஓவியங்களுக்குகூட பல மில்லியன் டாலர் கொடுக்க போட்டி போடுகின்றனர்.   

மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர்களால்கூட உலகை வெல்லும் படைப்புகளை தர முடியும் என்பதுதான் வான் கோவின் வாழ்க்கை நமக்கு சொல்லும் உண்மை. நாம் நமது குறைகளை நினைத்து குன்றிப்போகாமல் நிறைகளை நினைத்து நிமிர்ந்து நின்றால் நம்மாலும் குன்றின் மேல் இட்ட விளக்காக மின்ன முடியும். வாழும்போதுதான் வானம் வசப்பட வேண்டுமென்பதில்லை மறைந்த பிறகும் வரலாறு நம்மை நினைத்துப்பார்த்தால் அதுவே வானம் வசப்பட்டதற்கு சமமாகும்.

(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவன் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்! :-)

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள். மாணவன்

4 comments:

  1. அவருடைய ஓவியங்கள் பளிச்சென்று வண்ணமயமாக இருக்கும். அவர் வரைந்த ஓவியங்களில் உலகப்புகழ் பெற்றது சூரியகாந்தி பூ ஓவியம். /

    அருமையான ஓவியர்பற்றிய பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    http://jaghamani.blogspot.com/2012/03/blog-post_24.html

    சூரியகாந்தி

    ReplyDelete
  2. ஓவியங்கள் மிகவும் அழகு...

    மனதை மாற்றுவதற்கும் (முக்கியமாக கோபத்தை மாற்ற) ஓவியம் வரைதல் நல்லதொரு வழி...

    அவரைப்பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  3. அட பாவமே! இப்படி இவரோட அருமை தெரியாமையே போயிட்டாரே! எப்போதுமே ஒருவர் சென்ற பிறகு தான் அதிகம் மதிக்கிறது.. அந்தக்காலத்தில் இருந்தே இப்படித் தான் போல.

    ReplyDelete
  4. பாராட்டுக்கள்.மிக்க நன்றி..

    ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.