Monday, January 30, 2012

ஆப்ரா வின்ஃப்ரெ (The Oprah Winfrey Show) - வரலாற்று நாயகி!

"திருமணம் ஆகாத ஆணுக்கும் பெண்ணுக்கும் மகளாக பிறந்தவள் நான், அதனால் பாட்டி வீட்டில் வளர்ந்தேன். சிறிய வயதில் தாய் தந்தையரின் அன்புக்கு ஏங்கிய எனது சுட்டித்தனத்தை பொறுக்க முடியாமல் என் பாட்டி என் அம்மா வீட்டுக்கு துரத்தி விட்டார். நான் அங்கு வந்தது பிடிக்காத என் தாய் என்னை வெறுத்தார். அந்தக்கால கட்டத்தில் என் தாயின் உறவினர் சிலர் சிறுமி என்று கூட பாராமல் என்னை கதற கதற கற்பழித்தனர். பதினான்காவது வயதிலேயே கர்ப்பமாகி குழந்தையும் பெற்றேன். குறை பிரசவத்தில் பிறந்த அந்தக் குழந்தை சில நாட்களிலேயே இறந்து போனது. எவருடைய மடியிலாவது முகம் புதைத்து வலி தீரும் வரை அழ வேண்டும் போல இருந்தது" 

பிரபலத்தின் உச்சியில் இருந்த ஒரு பெண் தன் கெளரவம் பாதிக்கப்படுமே என்று கொஞ்சமும் அஞ்சாமல் மில்லியன் கணக்கானோர் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்தக் கதையைக் கூறியபோது ஒரு தேசமே வாயடைத்துப் போனது.

குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகள் என்பதுதான் அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்ட தலைப்பு. அந்த நிகழ்ச்சியை வழிநடத்தியவரே கூறிய தன் சொந்தக்கதை அது. அதன்பிறகு பலர் தங்களது கருத்துக்களைகூற "குழந்தைகள் பாதுகாப்பு சட்டம்" என்று ஒரு புதிய சட்டத்தையே அறிமுகம் செய்தது அந்த தேசம். அதன் பிறகு அந்த நிகழ்ச்சியில் அந்தப்பெண் எதைப்பற்றி பேசினாலும் அந்தக் கருத்துகள் நாடு தழுவிய அளவில் சிந்தனைகளை தூண்டிவிட்டன, பலரின் மனசாட்சிகளை கிண்டிவிட்டன. மற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அதன் முன் மண்டியிட்டன. அவரது நிகழ்ச்சியில் முன்பின் தெரியாத ஒரு எழுத்தாளர் தோன்றினால் அடுத்த நாளே அவர் எழுதிய புத்தகங்களின் விற்பனை விண்ணை முட்டும். ஒருமுறை மாடுகளுக்கு ஏற்படும் மூளைக் காய்ச்சல் நோய் பரவியிருந்த சமயத்தில் தனக்கு 'ஹேம்பர்கர்' சாப்பிட பயமாக இருக்கிறது என்று அவர் சிரித்துக்கொண்டே சொன்ன ஒரு வார்த்தையால் அந்த தேசத்தின் மாட்டிறைச்சி வியாபாரமே நொடித்து போகுமளவுக்கு மோசமடைந்தது.

அந்த அதிசயப்பெண் யார்? என்பது இந்நேரம் உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். இன்று 132 நாடுகளில் அவரது நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அமெரிக்காவில் மட்டும் தினசரி சுமார் 22 மில்லியன் பேர் சலிப்பு தட்டாமல் அந்த நிகழ்ச்சியை பார்த்து ரசிக்கின்றனர். இத்தனைக்கு அது ஒரு இசை நிகழ்ச்சியோ, விளையாட்டு நிகழ்ச்சியோ, கதம்ப நிகழ்ச்சியோ அல்ல.  Talk Show எனப்படும் பேச்சு நிகழ்ச்சி. ஆம் தொலைக்காட்சி வரலாற்றில் இதுவரை எவரும் எட்டாத சிகரங்களை தொட்டு இன்றும் சின்னத்திரையின் ராணியாக வலம் வந்துகொண்டிருக்கும் ஆப்ரா வின்ஃப்ரெயைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.

1954 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதி அமெரிக்காவின் மிஸிஸிப்பி மாநிலத்தில்  Kosciusko என்ற ஊரில் பிறந்தார் Oprah Gail Winfrey. திருமணம் செய்து கொள்ளாத Vernon Winfrey & Vernita Lee இருவரும் மகள் ஆப்ரா பிறந்தவுடனேயே பிரிந்தனர். பெற்றோரின் அன்பும் அரவனைப்பும் இல்லாமல் பாட்டியின் வீட்டில் வளர்ந்தார் ஆப்ரா. ஆறு வயதானபோது அவர் தாயுடன் வாழச் சென்றார். அந்தக்கால கட்டத்தில்தான் உறவினர்களின் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். அவற்றைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் 13 வயதில் வீட்டை விட்டு வெளியேறிய ஆப்ரா இளம் குற்றவாளிகளை தடுத்து வைக்கும் இல்லத்திற்கு முதலில் அனுப்பப்பட்டார் அங்கே இடம் இல்லாததால் உடலிலும், மனதிலும் பல ரணங்களை சுமந்து கொண்டு தனது 14 ஆவது வயதில் Nashville-யில் இருந்த தனது தந்தையின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

முடி திருத்தும் வேலை செய்து வந்த தந்தை மிகவும் கண்டிப்பானவர். தனது மகளுக்கு சில விதிமுறைகளை வகுத்துக் கொடுத்து அவற்றைப் பின்பற்ற சொன்னார். வாழ்க்கைக்கு வழிகாட்டினார் நிறைய புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தார். ஒவ்வொரு வாரமும் ஒரு புத்தகத்தை படித்து அதைப் பற்றி அறிக்கை எழுத வேண்டும். தினசரி ஐந்து புதிய சொற்களை கற்றுக்கொள்ளா விட்டால் ஆப்ராவுக்கு இரவு உணவு கிடையாது. இரவில் வெகுநேரம் வெளியில் இல்லாமல் வீட்டிற்கு வந்துவிட வேண்டும். இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு இடையே கட்டுக்கோப்பாக வளர்ந்தார் ஆப்ரா. நிறைய வாசித்ததால் அவருக்கு நன்றாகவும், சுவாரசியமாகவும் பேசும் தைரியம் வந்தது. பள்ளியில் நாடகக் குழுவில் சேர்ந்து சிறந்த பேச்சாளருக்கான ஆயிரம் டாலர் பரிசை வென்றார்.

Nashville - நகரத்தின் Miss Fire Prevention - என்ற தீ தடுப்புப் பட்டத்தை வென்றார். அதனை வென்ற முதல் கருப்பினப் பெண் அவர் என்பது குறிப்பிடதக்கது. 1971- ஆம் ஆண்டில் அவருக்கு 17 வயதானபோது Miss Black Tennessee என்ற கருப்பு அழகி பட்டத்தை வென்றார். அதே ஆண்டு W-VOL என்ற வானொலியில் அவருக்கு பகுதிநேர செய்தி வாசிப்பாளர் வேலை கிடைத்தது. ஒளிப்பரப்புத் துறையில்தான் பணியாற்ற வேண்டும் என்று விரும்பிய ஆப்ராவுக்கு படித்துக் கொண்டிருந்தபோதே CBS தொலைக்காட்சியில் இரவு செய்திகள் வாசிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் பணியை செய்து கொண்டே 1976 ஆம் ஆண்டு டென்னஸி ஸ்டேட் ( Tennessee State University) பல்கலைக்கழகத்தில் பேச்சுத்தொடர்பு மற்றும் நாடக கலைத் துறைகளில் பட்டம் பெற்றார். அதன் பிறகு Baltimore வந்த ஆப்ரா இன்னொரு புகழ் பெற்ற தொலைக்காட்சி நிறுவனமான ABC-யில் ஒரு நிருபராகவும், செய்தி வாசிப்பாளராகவும் சேர்ந்தார்.

செய்தி வாசிக்கும்போது எதாவது தவறு செய்தால் மற்றவர்கள் மன்னிக்கவும் என்று சொல்வார்கள். ஆனால் ஆப்ரா கணிரென்று சிரித்து விடுவார். ஒருமுறை விபத்து ஒன்றில் பொதுமக்கள் இறந்த செய்தியை தொலைக்காட்சியில் வாசித்த போது அழுது விட்டார். இவற்றால் அவரை செய்திப் பிரிவிலிருந்து தூக்கி Talk Show எனப்படும் பேச்சு நிகழ்ச்சிக்கு மாற்றியது நிர்வாகம். எழுதியதை வாசிப்பதை விட பேச்சு நிகழ்ச்சியில் இயல்பாக பேச முடியும் என்பதால் ஆப்ராவின் பல்வேறு பரிணாமங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படத் தொடங்கின. 1984 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிக்காக்கோ வந்த ஆப்ராவுக்கு பிரபலத்தில் அடிமட்டத்தில் இருந்த AM Chicago என்ற காலை நேர பேச்சு நிகழ்ச்சியை பிரபலமாக்கும் கடினமான பொறுப்பு வழங்கப்பட்டது. ஒரே ஆண்டின் அதனை சிக்காக்கோவில் அதிக பேர் பார்க்கப்படும் நிகழ்ச்சியாக மாற்றிக் காட்டினார் ஆப்ரா. 

அவரது திறமையைப் பார்த்து மலைத்துப்போன அந்த தொலைக்காட்சி நிறுவனம் அடுத்த ஆண்டே அந்த நிகழ்ச்சியை "The Oprah Winfrey Show" என்று பெயர் மாற்றம் செய்தது. 1985 செப்டம்பரில் தொடங்கிய அந்த நிகழ்ச்சி கடந்த 25 ஆண்டுகளில் ஓர் அசாதாரண சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. அதற்கு அடுத்த ஆண்டே அந்த நிகழ்ச்சி அமெரிக்கா முழுவதும் ஒளிபரப்பத் தொடங்கியது. அதன் பிறகு ஆப்ராவும், அவரது நிகழ்ச்சியும் வாங்கிக் குவித்திருக்கும் விருதுகளை பட்டியலிட நேரம் போதாது. 1985-ஆம் ஆண்டில் 'The Color Purple' என்ற திரைப்படத்திலும் நடித்து அனைவரையும் கவர்ந்தார் ஆப்ரா. 1986-ஆம் ஆண்டு  'Harpo Productions' என்ற தனது சொந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். 1988 ஆம் ஆண்டு தனது சொந்த நிகழ்ச்சியின் உரிமையை வாங்கினார். 

வரலாற்றில் 'Talk Show' நிகழ்ச்சியை சொந்தமாக தயாரித்து விநியோகிக்கும் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார். 1993-ஆம் ஆண்டு அவரது உந்துதலின் பேரில்தான் பிள்ளைப் பாதுகாப்பு சட்டத்தில் கையெழுத்திட்டார் அப்போதையை அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன். அந்த சட்டம் "ஆப்ரா மசோதா" என்றே அழைக்கப்படுகிறது. 1996-ஆம் ஆண்டு "Oprah's Book Club" என்ற புத்தகச் சங்கத்தை நிறுவினார். அவரது நிகழ்ச்சியில் பரிந்துரைக்கப்படும் எல்லாம் புத்தகங்களும் அசுர வேகத்தில் விற்று முடியத் தொடங்கின. 1997 ஆம் ஆண்டு அவர் தொடங்கிய "Oprah's Angel Network" என்ற அறநிதி அமைப்பு பல்வேறு அறப்பணிகளுக்கு நிதியுதவி அளித்து வருகிறது. 2000-ஆம் ஆண்டு தொடங்கி அந்த அமைப்பு ஒவ்வொரு திங்கட்கிழமையும் "Use Your Life" எனப்படும் உங்கள் வாழ்க்கையைப் பயன்படுத்துங்கள் என்ற நிகழ்ச்சியின் மூலம் பரிசை வழங்கி வருகிறது. 

ஒவ்வொரு வாரமும் தங்கள் வாழ்க்கையைப் பயன்படுத்தி மற்றவர்களின் வாழ்க்கைக்கு நன்மை செய்யும் ஒருவருக்கு நூறாயிரம் அமெரிக்க டாலரை பரிசாக வழங்குகிறார் ஆப்ரா. 1998-ஆம் ஆண்டு அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவித்தது அமெரிக்க தேசிய தொலைக்காட்சிக் கழகம். 2000-ஆம் ஆண்டில் தமது சொந்த சஞ்சிகையைத் தொடங்கினார். மாதம் இரண்டரை மில்லியன் பிரதிகள் விற்பனையாகின்றன. இருபதாம் நூற்றாண்டின் செல்வாக்குமிக்க நூறு பேரின் பட்டியலில் ஆப்ராவுக்கும் இடம் தந்திருக்கிறது டைம் சஞ்சிகை. 2003- ஆம் ஆண்டில் பில்லியனர் அதாவது ஆயிரம் மில்லியன் டாலருக்கு சொந்தக்காரர் ஆப்ரா என்று அறிவித்தது ஃபாக்ஸ் சஞ்சிகை. அந்த பெருமையை பெற்ற முதல் அமெரிக்க ஆப்பிரிக்கா வம்சா வழி பெண் ஆப்ரா என்பது குறிப்பிடதக்கது.

என்ன மூலதனத்தைக் கொண்டு ஆப்ரா வின்ஃப்ரெ இவ்வுளவு பெரிய சாதனைகளைச் செய்திருக்கிறார். கருப்பினத்தவர் என்ற பின்னடைவையும், திருமணம் ஆகாதோருக்கு பிறந்தவர் என்ற களங்கத்தையும், பாலியல் கொடுமைகளுக்கு ஆளானவர் என்ற வலிகளையும், மற்ற பல ரணங்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு அவரால் இந்த அளவுக்கு உயர்ந்து நிற்க முடிகிறதென்றால் அதற்கு தன்னம்பிக்கையும், கடும் உழைப்பும், விடாமுயற்சியும், சமூகசீர்கேடுகள் தீர வேண்டும் என்ற உயரிய எண்ணமும், சமூக கடப்பாடும் காரணமாக அல்லாமல் வேறு எவை காரணங்களாக இருந்திருக்க முடியும்? சிந்தித்துப் பாருங்கள்....ஆப்ரா வின்ஃப்ரெயைப் போன்று நமக்கும் சில ரணங்களும், வலிகளும் இருந்தாலும் தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் கடினமாக உழைத்தால் உலகில் நம்மாலும் மாற்றங்களை கொண்டு வரமுடியும். நாம் விரும்பும் வானத்தையும் வசப்படுத்த முடியும்!.

(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்! :-)

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள். மாணவன்

18 comments:

  1. நல்ல பதிவு ! வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
  2. பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

    மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

    படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

    ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

    எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

    எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.

    ReplyDelete
  3. ஓப்ராவை பற்றி முழுமையாக தெரிந்துகொண்டேன், நல்ல பகிர்வு மாணவன்!

    ReplyDelete
  4. உபயோகமான பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அண்ணே வணக்கம் ,,,
    நம்பிக்கை தரும் ஒரு பெண்மணியை பற்றி இப்போது தான் அறிந்து கொண்டேன் ,.,.
    நல்ல பகிர்வுக்கு நன்றிங்க அண்ணே

    ReplyDelete
  6. வரலாற்று நாயகியை பற்றி தெரிந்துக் கொண்டேன். பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  7. இவங்க பிரபலமானவங்கன்னு மட்டும்தான் தெரியும்.உங்க பதிவினால் முழுமையாக அறிந்து கொள்ள முடிந்தது.நன்றி மாணவன்..!!

    ReplyDelete
  8. நல்ல பகிர்வு பதிவிட்ட மாணவனுக்கு வாழ்த்துக்கள்

    Regards
    M.Gazzaly
    (greenhathacker.blogspot.com)

    ReplyDelete
  9. இவரை பற்றி கொஞ்சம் கேள்விப் பட்டிருக்கிறேன். இன்று முழுமையாக தெரிந்து கொண்டேன். நன்றி

    ReplyDelete
  10. மிக மிக அருமையான பதிவு வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. அருமையான பதிவு வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. Nanri .. nalla pathivu


    Suresh

    ReplyDelete
  13. முன்பு இவரது நிகழ்ச்சியை தவறாமல் தொடர்ந்து பார்த்து விடுவேன்...(அப்போது சன் டிவி எல்லாம் வராதா போது...)

    அமெரிக்க அதிபராக இருந்தாலும் சாமானியா நபராக இருந்தாலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டுவதையும் பார்த்திருக்கிறேன். இவரது நிகழ்ச்சியில் என்னால் மறக்க முடியாதது மைக்கேல் ஜாக்சனுடனான பேட்டி!!

    தன்னம்பிக்கைக்கு மிக சிறந்த உதாரணம் இவர்கள் !! வலியில் நல்வழி கண்ட மாபெரும் வரலாற்று நாயகி !!

    பகிர்வுக்கு நன்றி மாணவன்

    ReplyDelete
  14. அருமையான பதிவு ..., வாழ்த்துக்கள் ..!

    ReplyDelete
  15. இவருக்கு பின்னால் இவ்வளவு சோகம் இருக்கும் என்று தெரியவில்லை

    ReplyDelete
  16. ahaa ...chance ilali,.....semayaa irukku....

    ammadi enna talent avangalukku....

    avangalai patri innum padikkanum naan...


    really romba nanri nanri

    ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.