Monday, May 23, 2011

ஹமில்டன் நாகி - மருத்துவ உலகில் ஒரு மாறுபட்ட மனிதரின் கதை!! (வரலாற்று நாயகர்)

1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ந்தேதி தென்னாப்பிரிக்காவின் கேப்டான் நகரில் எதிர்பாராத கோரவிபத்து ஒன்றினால் ஒரு காரால் மோதி தள்ளப்பட்டு உயிருக்கு ஊசலாடிய நிலையில் ஓர் இளம்பெண் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார்.அவரது உடலில் இதயம் மட்டும்தான் துடித்துக்கொண்டிருந்தது வேறு எந்த அசைவும் இல்லை. அறுவை சிகிச்சை மூலம் அந்தப் பெண்ணின் இதயத்தை அகற்ற வேண்டிய பொறுப்பு ஹமில்டனுக்கு ஆனால் அந்த நாட்டின் சட்டப்படி அவர் அந்தப் பெண்ணை தொடக்கூட முடியாது ஏனெனில் ஹமில்டன் கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர். 

உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்த இளம்பெண் டெனிஸ் டார்வால் வெள்ளை இனப்பெண். தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் உச்சகட்டத்தில் இருந்த அந்த சமயத்தில் வெள்ளையர்களின் அறுவை சிகிச்சை அறைக்குள் நுழையவோ மருத்துவமனையில் வெள்ளையர்களை தொடவோ அறுவை சிகிச்சை செய்யவோ கருப்பர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் ஹமில்டனுக்காக மட்டும் ரகசியமாக தனது குருட்டு சட்டங்களை மீற முடிவெடுத்தது அந்த மருத்துவமனை. அதற்கு காரணம் உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதில் ஹமில்டனுக்கு இருந்த அசாத்திய திறமைதான்.

அதுமட்டுமல்ல அன்றைய தினம் மருத்துவ உலகில் ஓர் வரலாற்று சிறப்பு வாய்ந்த தினம். ஆம் அன்றுதான் உலகின் முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சை புகழ்பெற்ற மருத்துவர் கிறிஸ்டியான் பெர்னாடின் தலைமையில் நடைபெற்றது. டெனிஸின் இருதயத்தை ஹமில்டன் லாவகமாக அறுத்து எடுக்க அதனை லூயிஸ் வஸ்கான்ஷி என்பவருக்கு பொருத்தினார் கிறிஸ்டியான் பெர்னாட். உலகின் முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. 

அந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த அறுவை சிகிச்சையில் பெயரும் புகழும் கிறிஸ்டியான் பெர்னாட்க்குப்போக அதில் ஹமில்டனின் பங்களிப்பு மறைக்கப்பட்டது மறுக்கப்பட்டது. உண்மையில் நீ ஒரு வெள்ளை இனத்தவரின் உடலை அறுக்கிறாய் என்பதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று உறுதிமொழி வாங்கிக்கொண்ட பின்னரே ஹமில்டனை அந்த அறுவை சிகிச்சை செய்ய அனுமதித்தாம் அந்த மருத்துவமணை நிர்வாகம். உலக பத்திரிக்கைகளின் பக்கங்களில் அந்த அறுவை சிகிச்சை சம்பந்தபட்ட படங்கள் பிரசுரமாயின. அதில் சில படங்களில் டாக்டர் பெர்னாடின் பின்புறம் புன்னகையோடு நின்றிருந்தார் ஹமில்டன், அவர் யார் என்று எழுந்த கேள்விகளுக்கு துப்புறவு ஊழியர் என்றும், பூங்கா காவலர் என்றும் பதில் கூறி சமாளித்தது மருத்துவமனை நிர்வாகம். 

இந்த சம்பவம் நடந்த பல ஆண்டுகளுக்கு பிறகு டாக்டர் கிறிஸ்டியான் பெர்னாட் இறப்பதற்கு முன்புதான் ஹமில்டன் பற்றிய உண்மைகள் வெளியாகத் தொடங்கின. தன் மரணத்திற்கு முன் ஹமில்டன் என்னைவிட சிறந்த அறுவை சிகிச்சை நிபுனர் என்று மனம் திறந்து புகழ்ந்தார் கிறிஸ்டியான் பெர்னாட் இத்தனைக்கும் உயர்நிலை கல்விகூட படிக்காதவர் ஹமில்டன் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா!! இதோ அவரது வாழ்க்கை பயணத்தின் பதிவு...

1926 ஆம் ஆண்டு ஜூன் 26 ந்தேதி தென்னாப்பிரிக்காவின் ஹாக்-கேன் என்ற பகுதியில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார் ஹமில்டன் நாகி சிரமபட்டு தொடக்கப்பள்ளி கல்வியை முடிந்த ஹமில்டனை அதற்குமேல் அவரது குடும்பத்தால் படிக்க வைக்க முடியவில்லை. எனவே தனது 14 ஆவது வயதில் வேலை தேடி கேப்டான் நகருக்கு வந்தார். கேப்டான் பல்கலைக்கழகம் ஹமில்டனை தோட்ட ஊழியராக பணியில் சேர்த்துக்கொண்டது. அடுத்த பத்து ஆண்டுகள் அந்த பல்கலைகழகத்தின் தோட்ட வேலைகளையும் டென்னிஸ் மைதானத்தையும் பரமாரித்து வந்தார். துப்புறவு வேலை செய்தாலும் எப்போதுமே தூய்மையாக இருப்பார் ஹமில்டன்.

1954ல் தோட்ட வேலையையும் பார்த்துக்கொண்டு பல்கலைகழகத்தின் மருத்துவ ஆய்வு கூடத்தில் உதவுமாறு ஹமில்டனை கேட்டுக்கொண்டார் ராபர்ட் கோட்ஸ் என்ற மருத்துவதுறைத் தலைவர், ஹமில்டனும் அதற்கு இணங்கி அங்கு ஆய்வுக்காக வைக்கப்படிருந்த விலங்குகளை பராமரித்து வந்தார். ஒருமுறை ஓர் ஒட்டகசிவிங்கியை அறுத்து பரிசோதிக்கும்போது தனக்கு உதவுமாறு ஹமில்டனை கேட்டுக்கொண்டார் ராபர்ட் கோட்ஸ் அப்போது ஹமில்டனின் செய்ல்பாடுகளை கவணித்து வியந்த கோட்ஸ் தனது உதவியாளராக சேர்த்துக்கொண்டார். அந்த ஆய்வுகூடத்தில் எல்லாவிதமான விலங்கினங்களையும் அறுத்து மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 

தொடக்கப்பள்ளியோடு கல்வியை முடித்துக்கொண்ட ஹமில்டன் அந்த பரிசோதனைக்கூடத்தில் கண்களால் பார்த்தே பலவற்றைக் கற்றுக்கொண்டார். விலங்கின் உறுப்புகளை லாவகமாக அறுத்து எடுப்பதில் ஹமில்டன் தனித்திறமை காட்டினார்.வெகுவிரைவில் மருத்துவதுறை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் அளவுக்கு ஹமில்டன் சிறந்து விளங்கினார்.அடுத்த நாற்பது ஆண்டுகளில் சுமார் 5000 மருத்துவ மாணவர்களுக்கு அவர் பயிற்சி அளித்தார். அவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்களில் பலர் பின்னாளில் மருத்துவதுறையில் சிறந்த நிபுனர்களாக உயர்ந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

ஆனால் அந்த நாற்பது ஆண்டுகளில் ஹமில்டனுக்கு ஒரு மருத்துவருக்கான ஊதியமோ, மரியாதையோ, கவுரமோ வழங்கப்படவில்லை. பல்கலைகழக பதிவேட்டில் ஹமில்டன் ஒரு துப்புறவு ஊழியர் என்றே குறிக்கப்பட்டிருந்தது. 1991 ஆம் ஆண்டு அவர் பணியிலிருந்து ஓய்வுபெற்றபோது அவருக்கு கிடைத்த மாதாந்திர ஓய்வூதியம் 760 ராண்ட் அதாவது 275 அமெரிக்க டாலர்தான். டிப்ளமோகூட படிக்காத ஒருவருக்கு அவ்வளவுதான் சம்பளம் கொடுக்க முடியும் என்றது பல்கலைக்கழக நிர்வாகம். பல அறுவை சிகிச்சை வல்லுநர்களை உருவாக்கிய ஹமில்டனால் தனது ஐந்து பிள்ளைகளை படிக்க வைக்க முடியவில்லை ஒரு பிள்ளையை மட்டும் உயர்நிலைப்பள்ளி கல்விவரை படிக்க வைத்தார். மிகவும் சிரமமான வாழ்க்கைக்கு பழக்கப்பட்டவர் ஹமில்டன்.

வரலாற்று சிறப்பு வாய்ந்த உலகின் முதல் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அன்றைய தினம்கூட டாக்டர் கிறிஸ்டியான் பெர்னாட் பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்துக் கொண்டிருக்க ஹமில்டன் அங்கிருந்து கிளம்பி தனது ஓரறை வீட்டிற்குதான் சென்றார். அந்த வீட்டில் அடிப்படை வசதியோ மின்சார வசதியோ கிடையாது. கிடைத்த சொற்ப சம்பளத்தில் பெரும்பகுதியை தனது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் அனுப்பிவிட்டு எந்த வசதியுமின்றி எளிமையாக வாழ்ந்தார் ஹமில்டன். கடவுள் பக்திகொண்ட அவர் பல்கலைகழகத்தில் இருந்த நாட்களில் மதிய உணவு நேரத்தில் பக்கத்திலிருந்த இடுகாட்டில் கூடும் வீடு அற்றவர்களுக்கு பைபிளை வாசித்துக்காட்டுவதிலும், மது மற்றும் போதைப் பொருட்களைப்பற்றி எச்சரிப்பதிலும் செலவிட்டார்.  

ஓய்வுபெற்ற பிறகு சொற்ப சொத்தே இருந்தபோதும் ஹமில்டன் பழைய பஸ் ஒன்றை நடமாடும் மருந்தகமாக மாற்றி தான் பிறந்த ஊருக்கு மருத்துவ வசதியை ஏற்படுத்தித் தந்தார். இன ஒதுக்கல் கொள்கை முடிவுக்கு வந்த பிறகு டாக்டர் கிறிஸ்டியான் பெர்னாட் மூலம் ஹமில்டனின் மருத்துவ பங்களிப்பு உலகுக்கு தெரிய வந்தது. 2002 ஆம் ஆண்டு ஹமில்டனுக்கு National Orders. The Order of Mapungubwe எனப்படும் தென்னாப்பிரிக்காவின் ஆக உயரிய விருது வழங்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது கேப்டான் பல்கலைக்கழகம். வாழ்ந்த காலம் முழுவதும் அங்கீகாரம் பெறாத ஹமில்டன் சிறப்பான அந்த இரண்டு அங்கீகாரங்களைபெற்ற இரண்டு ஆண்டுகளில் அதாவது 2005 ஆம் ஆண்டு மே மாதம் 29ந்தேதி தனது 78 ஆவது வயதில் இயற்கை எய்தினார். 

இயற்கை ஹமில்டனுக்கு மிக உன்னதமான திறமையை கொடுத்திருந்தது. அந்த திறமையை மட்டும் விரும்பிய அந்த தேசத்தின் வெள்ளை இன சிறுபான்மையினர் அவரது தோலின் நிறத்தை வெறுத்தனர். கருப்பர் என்ற ஒரே காரணத்திற்காக ஹமில்டனுக்கு எல்லா உரிமைகளும் மறுக்கப்பட்டது. ஹமில்டன் நாகிக்கு வானம் என்ன வாழ்க்கைகூட வசப்படவில்லை என்பது உண்மைதான். ஆனாலும் அவர் போர்க்கொடி தூக்கவில்லை தனக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களுக்காக நீதிப்போராட்டம் நடத்தவில்லை தோலின் நிறத்தை அடையாளம் காட்டி உலகம் பாரபட்சம் காட்டினாலும் கடவுள் தனக்குத் தந்த திறமையை பாரபட்சமின்றி பிறர் நலனுக்காக பயன்படுத்திய ஒரு குணத்துக்காகவே ஹமில்டன் நாகி போற்றப்படவும் மதிக்கப்படவும் வேண்டியவர். 

ஹமில்டன் நாகியின் வாழ்க்கை வரலாறை படிக்கும்போது சமநீதியில் நம்பிக்கைகொண்ட எந்த வெள்ளை இனத்தவரும் கூனிக்குறுகி போகவும் அதன்மூலம் இதுபோன்ற அநியாங்கள் இனியும் தொடரக்கூடாது என எண்ணித்துணியவும் தயங்கமாட்டார்கள். இது ஒன்றே ஹமில்டன் நாகிக்கு வானம் வசப்பட்டதற்கு சமமாகும். கடவுள் தந்த திறமையை சுயநலமின்றி பிறர் நலனுக்காகப் பயன்படுத்தும் எவரும் வானத்தை வசப்படுத்தலாம் என்பதுதான், வாழும்போது மறக்கப்பட்ட ஆனால் மறைந்த பின்னும் நினைக்கப்படும் ஹமில்டன் நாகியின் வாழ்க்கை நமக்கு சொல்லும் உண்மையாகும்.   


(தகவலில் உதவி - நன்றி ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்) 

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள். மாணவன்                           

34 comments:

  1. இன துவேசம் என்பது ஒரு தடையில்லை என்பது இவர் போன்ற திறமையானவகளுக்கு தெரியும் .......வெள்ளையன் கருப்பன் இனவெறியில் உதித்தவர்கள் சிலர் ///உதிர்நதவர்கள் பலர்

    ReplyDelete
  2. தொடரட்டும் வரலாற்றுக் குறிப்புகள்

    ReplyDelete
  3. தொகுத்தளிக்கப்பட்ட விதம் மிகவும் அருமை. தொடருங்கள் மாணவர்கள் அவர்களே..! நன்றி வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  4. வழக்கம் போல் சிறப்பான பதிவு

    என்ன ஆனி அதிகமோ அடிக்கடி வாங்க

    =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
    ஒரு காதல் கதை
    http://speedsays.blogspot.com/2011/05/love-story.html

    ReplyDelete
  5. சிறப்பான அறிமுகத்திற்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. மிக சிறந்த பதிவு நண்பா...

    பந்தை நீருக்குள் எவ்வளவு நேரம் தான் அமுக்கி வைத்திருந்தாலும் ஒரு நாள் அது மேலே வர தான் செய்யும்....

    ReplyDelete
  7. மிக மிக அருமையான பதிவு. தென் ஆப்பிரிக்காவில் நிலவிய இன பாகுபாட்டை இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள முடிந்தது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  8. அருமை

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. எங்கிருந்து சார் இந்த மேட்டருலாம் எடுக்குறீங்க..
    செமையா.. வெயிட்டா இருக்கு மேட்டரு..

    ReplyDelete
  10. ///உலகின் முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
    ////

    மிக்க நன்றி சகோதரம்.. மிக்க நன்றி.. இவரை பற்றி தெரிந்திருந்தாலும் இன்று தான் விளக்கமாய் அறிகிறேன்..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. ?

    ReplyDelete
  11. இவரைப் பற்றி முன்பே அறிவேன், ஆச்சர்யப்பட வைக்கும் திறமைசாலி, இன பாகுபாட்டால் அதிகம் வெளியில் அறியப்படாமல் இருந்தார்!

    ReplyDelete
  12. சிம்பு தங்கள் தகவல்கள் மிக அருமை தங்களின் தளம் மாணவர்களுக்கு மிக சிறந்த ஒரு தளமாகும். உங்களை போன்றவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும். முயற்சி செய்யுங்கள்.

    ReplyDelete
  13. அண்ணா உண்மைலேயே ரொம்பப் பாராட்டவேண்டிய மனிதர். எனக்கு இவரைப் பற்றி இப்பத்தான் தெரியும். உண்மைலேயே உங்களுக்கு மிகப்பெரிய நன்றி சொல்லணும்!

    அவரோட வரலாறு ரொம்பவே சோகமா இருக்கு. உண்மைலேயே ரொம்ப பாராட்டப்பட வேண்டியவர். அவரோட நிற வேறுபாட்டைக் காட்டி மக்கள் வெறுத்தாலும் அவரோட திறமை வெளிப்பட்டது!

    எவ்வளவு சிரமத்திலும் அவரோட நியாயத்தைப் பற்றிக் கேள்வி கேட்காதது அவர் மேலான மரியாதை அதிகப்படுத்துது அண்ணா! எழுதிய விதமும் ரொம்ப நல்லா இருக்கு :-)

    ReplyDelete
  14. தொகுத்தளிக்கப்பட்ட விதம் மிகவும் அருமை. தொடருங்கள் மாணவர்கள் அவர்களே..! நன்றி வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  15. சிம்பு தங்கள் தகவல்கள் மிக அருமை தங்களின் தளம் மாணவர்களுக்கு மிக சிறந்த ஒரு தளமாகும். உங்களை போன்றவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும். முயற்சி செய்யுங்கள்

    ReplyDelete
  16. எனக்கு இவரைப் பற்றி இப்பத்தான் தெரியும். உண்மைலேயே உங்களுக்கு மிகப்பெரிய நன்றி சொல்லணும்!

    ReplyDelete
  17. நல்ல பதிவு ...எங்க இருந்து தான் கண்டுபிடிகிரானோ ...

    ஹாமில்டன் போல நீயும் பல சாதனைகள் செய்வாய் ...

    ReplyDelete
  18. இவரைப்பற்றி உங்க பதிவு பார்த்தபிறகுதான் தெரிந்து கொண்டேன்.
    நல்லா தொகுத்து தந்திருக்கீங்க.

    ReplyDelete
  19. ருமையான, இதுவரை படித்திராத தெரிந்திராத தகவல், நேரம் கிடைக்குமானால் தாங்கள் எழுதியிருக்கும் இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை பிடிஎப் புத்தகாம மாற்றினால் தரவிறக்கி வைத்து படிக்க வசதியாய் இருக்கும்.

    இதிலும் ஒரு சோகம் ஆண்டாண்டு காலாமாய் அடக்குமுறையினால் சிலர் பாதிக்கப்பட்டே வந்திருக்கிறார்கள் ஆனால் நயவஞ்சகர்கள் அதை மறைத்தே வந்திருக்கிறார்கள், இது இப்பவும் தொடர்கிறது

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்

    ReplyDelete
  20. மச்சி கலக்குற.....
    வாழ்த்துக்கள்.....இன்னும் நிறைய இது போல எதிர் பார்க்கிறோம்.....
    மாணவன் சேவை......எங்களுக்கு தேவை.......

    ReplyDelete
  21. இப்பொழுதுதான் முதல் முறை, இவரை பற்றி தெரிந்து கொள்கிறேன். பகிர்வுக்கு நன்றி. தொடர்ந்து இப்படி பல பதிவுகள் தர வேண்டும்.

    ReplyDelete
  22. ரொம்ப சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள்! இவரைப் பற்றி இன்று தான் தெரிந்து கொண்டேன் - நன்றி

    ReplyDelete
  23. தங்கள் மீது சாந்தி நிலவட்டுமாக சகோ.மாணவன்,

    ஹாமில்டன் பற்றி நிறைய அரிய தகவல்களை அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி சகோ.மாணவன்.

    மிகவும் பனுள்ள பகிர்வு.
    வாழ்த்துக்கள்.., சகோ.மாணவன்.

    ReplyDelete
  24. இவரை பற்றி இப்பொழுதுதான் படிக்கிறேன். சோர்வு ஏற்படாதவாறு தங்கள் எழுத்து நடை உள்ளது. வாழ்த்துக்கள் நண்பா..!

    ReplyDelete
  25. வணக்கம் அண்ணே ,...

    ReplyDelete
  26. மிக உன்னதமான மனிதரை பற்றிய செய்திகளை
    தொகுத்து வழங்கிய உங்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணே ...
    தொடரட்டும் உங்களின் ஆசிரியப்பணி....
    வாழ்த்துக்கள் /.///

    ReplyDelete
  27. உண்மையிலேயே ஆச்சரியமான மனிதர் தான்

    ReplyDelete
  28. அருமையான பகிர்வு. ரொம்ப நன்றி.

    ReplyDelete
  29. நெகிழ வைக்கும் வரலாறு. அருமை அண்ணா

    ReplyDelete
  30. சிறப்பான பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  31. கண்கலங்கிவிட்டேன் .நன்றி

    ReplyDelete
  32. அருமையான பதிவு

    ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.