Monday, July 9, 2012

ஜேம்ஸ் வாட் - வரலாற்று நாயகர்!

'Bulb' எனப்படும் மின்விளக்குகளை வாங்கிய அனுபவம் உங்களுக்கு இருந்திருக்கும். அப்படி வாங்கும்போது எத்தனை வாட் (Watt) சக்தி கொண்ட விளக்குகள் வேண்டும் என்று கேட்டு வாங்கியிருப்பீர்கள். வாட் (Watt) என்பது மின்சாரத்தைக் கணக்கிடும் ஓர் அளவு முறை. 'வாட்' என்பது வரலாற்றில் ஒரு மிகமுக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும் ஒரு கண்டுபிடிப்பாளரின் பெயரும்கூட. மனுகுலத்திற்கு அவரது கண்டுபிடிப்பைக் கெளரவப்படுத்தவே மின்சாரத்தைக் கணக்கிடும் முறைக்கு அவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது. அப்படி என்ன முக்கியமான கண்டுபிடிப்பை அவர் செய்திருக்கிறார் என்று நீங்கள் யோசிக்கலாம்! அவரது கண்டுபிடிப்பு பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிகழ்ந்த 'Industrial Revolution' எனப்படும் தொழிற்புரட்சிக்கு ஆணி வேராக இருந்த ஒரு கண்டுபிடிப்பு. இயந்திர சக்தியின் மகிமையை உலகுக்கு எடுத்துக்காட்டிய ஓர் அற்புத கண்டுபிடிப்பு, உலகம் தொழில்மயமாவதற்கு உதவிய ஓர் அபூர்வ கண்டுபிடிப்பு. 'நீராவி' என்ற இயற்கை சக்திக்கு கடிவாளமிட்டு அதனை மகத்தான சக்தியாக மனுகுலத்துக்கு தந்த அந்த வரலாற்று நாயகர் ஜேம்ஸ் வாட். அவர் கண்டுபிடித்துத் தந்த கருவி 'Steam Engine' எனப்படும் நீராவி இயந்திரம்.

1736-ஆம் ஆண்டு ஜனவரி 19-ஆம் நாள் ஸ்காட்லாந்தில் Greenock எனும் ஊரில் பிறந்தார் ஜேம்ஸ் வாட். அவரது குடும்பம் ஏழ்மையான குடும்பம் அந்தக்கால கட்டத்தில் ஆங்கிலேயர்கள் ஸ்காட்லாந்தில் அடிக்கடி ஆக்ரமிப்பு செய்ததால் நாட்டின் பொருளாதாரமும் மோசமான நிலையில் இருந்தது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகமாக இருந்தன. ஜேம்ஸ் வாட்டுக்கு வரைவது என்றால் கொள்ளை ஆசை. ஆனால் வரைவதற்கு தாள் வாங்கி தரக்கூடாத முடியாத அளவுக்கு குடும்பம் வறுமையில் இருந்தது. அதனால் வீட்டின் தரையில் ஆசை தீர வரைந்து தள்ளுவார் ஜேம்ஸ் வாட். அவர் வரைந்தவை எல்லாம் என்ன தெரியுமா? வட்டங்களும், சதுரங்களும், முக்கோணங்களும் கொண்ட கணித சம்பந்தமான படங்கள். பிறந்ததிலிருந்தே உடல் ஆரோக்கியமில்லாமல் இருந்தார் ஜேம்ஸ் வாட். எப்போதும் இருமிக் கொண்டே இருப்பார் ஸ்காட்லாந்தில் குளிர்காலம் வந்தால் அவரது நிலை இன்னும் மோசமாகும். அந்த நேரங்களில் அவரை பள்ளிக்கு அனுப்ப மாட்டார் தாயார். 

பள்ளிக்கு சென்ற நாட்களில் அவருக்கு 'geometry' என்ற கணிதக்கூறில் அதிக ஆர்வம் இருந்தது. பிந்நாளில் அவர் பொறியியலில் சிறந்து விளங்க அது ஒரு முக்கிய காரணம். அந்தக்காலத்தில் அதாவது சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னால் இங்கிலாந்து எப்படி இருந்தது தெரியுமா? எங்கும் அமைதியும் நிசப்தமுமாக இருக்கும். நகர்ப்புறங்களில் குதிரைகளின் குளம்பொலியும், அவை இழுத்துச் செல்லும் வண்டிகளின் சக்கர ஒலியும்தான் கேட்கும். கிராமப்புறங்களில் ஆற்றில் நீர் இறைக்கும் சக்கரங்களின் ஒலி கேட்கும். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வயல்வெளிகளும் காடுகளும்தான். அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு சிறு தொழிற்சாலைகள் இருந்தன. அங்கெல்லாம் உடல் உழைப்பினால் பொருட்களை உற்பத்தி செய்தார்கள். pulley, lever ஆகியவற்றால் இயங்கக்கூடிய ஒரு சில இயந்திரங்கள் இருந்தன. ஆனால் அவற்றை இயக்கவும் மனித சக்தி தேவைப்பட்டது. 

எந்த வேலையை செய்யவும் காற்று, நீர், விலங்குகள் ஆகியவற்றின் சக்திகள் தேவைப்பட்டன. இவற்றுக்கும் மேலாக ஒரு சக்தி தேவை என்ற தவிப்பு மனுகுலத்துக்கு நீண்ட காலமாகவே இருந்து வந்தது. மனுகுலம் தேடி வந்த அந்த சக்தி நீராவிதான் என்பதை உலகுக்கு நிரூபித்தவர் ஜேம்ஸ் வாட். அவருக்கு முன்பாகவே 1698-ஆம் ஆண்டு தாமஸ் சவேரி என்பவர் நீராவியைக் கொண்டு தண்ணீரை இறைக்கும் ஓர் எளியக் கருவிக்கான காப்புரிமம் பெற்றிருந்தார். அந்தக் கருவியில் சில மாற்றங்களை செய்து சற்று மேம்பட்ட நீராவி இயந்திரத்தை 1712-ஆம் ஆண்டு உருவாக்கினார் தாமஸ் நியூக்கோமன் என்ற ஆங்கிலேயர். ஆனால் அவையெல்லாம் நிலக்கரி சுரங்கத்திலிருந்து தண்ணீரை இறைக்கும் அளவுக்குதான் சக்தி கொண்டவையாக இருந்தன. 

1764-ஆம் ஆண்டு தாமஸ் நியூக்கோமனின் நீராவி இயந்திரத்தை பழுது பார்க்கும் வாய்ப்பு ஜேம்ஸ் வாட்டிற்கு கிட்டியது. அப்போதுதான் அவருக்கு நீராவி சக்தியின் மீது ஆர்வம் ஏற்பட்டது. படிப்பு முடிந்து லண்டனுக்கு வந்த ஜேம்ஸ் வாட் ஓராண்டுக்கு விஞ்ஞானக் கருவிகள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் பயிற்சி பெற்றார். பின்னர் ஸ்காட்லாந்து திரும்பிய அவருக்கு கிளாஸ்கோ (University of Glasgow) பல்கலைக்கழகத்தில் இயந்திரக் கருவிகள் தயாரிக்கும் பொறுப்பு கிட்டியது. அப்போது தாமஸ் நியூக்கோமன் உருவாக்கியிருந்த நீராவி இயந்திரத்தை பழுது பார்த்து தருமாறு பல்கலைக்கழகம் அவரைக் கேட்டுக்கொண்டது. அந்தக் கருவியில் நிறைய குறைகள் இருந்ததை உணர்ந்தார் ஜேம்ஸ் வாட். குறிப்பாக அதிக சக்தியை விரயமாக்கியது. 

விஞ்ஞானக் கருவிகள் செய்யும் பயிற்சியும், இயற்கையிலேயே அவருக்கு இருந்த கற்பனை சக்தியும் கைகொடுக்க ஜேம்ஸ் வாட் நீராவி இயந்திரத்தில் பல முக்கியமான மாற்றங்களை செய்தார். 1781-ஆம் ஆண்டு சக்கரம் பொருத்தப்பட்ட ஓர் அமைப்பையும், பிஸ்டனை மேலும் கீழும் இயக்கும் ரோட்டரி முறையையும் உருவாக்கி காப்புரிமம் பெற்றார். அந்த மாற்றங்களால் அந்த இயந்திரத்தின் சக்தி பன்மடங்கு பெருகியது. அந்த மாற்றங்களைக் கொண்டு வர கடுமையாக உழைத்தார் ஜேம்ஸ் வாட். சிறு வயதிலிருந்தே அவர் ஆரோக்கியமற்று இருந்ததால் அந்தக்கால கட்டத்திலும் அவர் அடிக்கடி நோய்வாய்ப்பட்டார். வேலையில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. இருப்பினும் அவர் மனம் தளரவில்லை. அவருக்கு வர்த்தகத் திறமை அவ்வுளவாக இல்லை எனினும் 1775-ஆம் ஆண்டு மேத்யூ போல்டன் என்ற பொறியாளருடன் கூட்டு சேர்ந்தார். அடுத்த 25 ஆண்டுகளுக்கு வாட்டும் போல்டனும் பல்வேறு நீராவி இயந்திரங்களை தயாரித்து பெரும் செல்வம் சேர்த்தனர். 


நீராவி இயந்திரத்தை மட்டுமின்றி வேறு சில கண்டுபிடிப்புகளையும் செய்தார் ஜேம்ஸ் வாட். இயந்திரத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும் 'centrifugal governor' என்ற கருவியையும்,  'pressure age' என்ற அழுத்தமானியையும் அவர் கண்டுபிடித்தார். ஜேம்ஸ் வாட் கண்டுபிடித்துத் தந்த நீராவி இயந்திரம் மனுகுலத்திற்கு கிடைத்த பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. பல தொழில்களுக்கு உதந்தவாறு நீராவி இயந்திரங்கள் உருவாக்கப்பட்டன. அதுவரை மனிதன் மற்றும் விலங்குகளின் தசை வலிமையையே நம்பியிருந்தது தொழில் உலகம். ஜேம்ஸ் வாட்டின் நீராவி இயந்திரம் வந்த பிறகு நெசவாலைகள் முதல் உற்பத்தி ஆலைகள் வரை இயந்திரமயமாயின. உற்பத்திப் பன்மடங்குப் பெருகியது. அதனால்தான்  'Industrial Revolution' எனப்படும் தொழிற்புரட்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பைச் செய்தவர் என்று ஜேம்ஸ் வாட்டை பெருமைப்படுத்துகிறது வரலாறு. 

ஜேம்ஸ் வாட்டின் கண்டுபிடிப்பு பல துறைகளில் ஊடுருவியுள்ளது. 1783-ஆம் ஆண்டு ஒரு படகில் நீராவி இயந்திரத்தைப் பொருத்தி அதனை இயக்கினார் marques de zafra என்பவர். 1804-ஆம் ஆண்டு Richard Trevithick என்பவர் நீராவி இயந்திரத்தைக் கொண்டு இயங்கும் இரயில் வண்டியைக் கண்டுபிடித்தார். அவையிரண்டும் ஆரம்பத்தில் வெற்றியடையாவிட்டாலும் சில ஆண்டுகளில் நீராவிப் படகும், நீராவி இரயிலும் முறையே கடல் மற்றும் நிலப்போக்குவரவில் பெரும் புரட்சியை ஏற்படுத்தின. நீராவிப் படகுகள் கடல் அலைகளை வெற்றிக் கொண்டன. நீராவி இரயில்கள் நிலப்பரப்புகளை வெற்றிக் கண்டன. 'Horsepower' என்ற அளவு முறையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த அளவு முறையை உலகுக்குத் தந்தவரும் ஜேம்ஸ் வாட்தான். ஒரு இயந்திரம் செய்யும் வேலையை ஓர் குதிரையின் சக்திக்கு ஒப்பிட்டுப் பார்க்கும் முறைதான் அது. 

ஒரு பலம் வாய்ந்த குதிரை ஒரு சராசரி வேலையை செய்வதற்கு எவ்வுளவு சக்தியைப் பயன்படுத்துகிறதோ அதுதான் ஒரு குதிரை சக்தி. 33000 பவுண்ட் எடையை ஒரு நிமிடத்திற்குள் ஓர் அடி உயரத்திற்கு தூக்குவதற்கு தேவைப்படும் சக்தியை ஒரு குதிரை சக்தி அதாவது ஒரு  'Horsepower' என்று நிர்ணயித்தார் ஜேம்ஸ் வாட். இன்றளவும் எந்த இயந்திரத்தின் வலிமையும் குதிரை சக்தி அளவில்தான் கணக்கிடப்படுகிறது. உலகின் தொழில் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை செய்த ஜேம்ஸ் வாட் 1819-ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் 19-ஆம் நாள் தமது 83-ஆவது வயதில் இங்கிலாந்தில் காலமானார். 


வாழ்நாள் முழுவதும் கிட்டதட்ட நோயாளியாகவே வாழ்ந்த ஒரு மனிதனால் மனுகுலத்திற்கு எவ்வுளவு பெரிய சக்தியைக் கொடுக்க முடிந்திருக்கிறது பார்த்தீர்களா? வறுமையும் நோயும் அவரது தன்னம்பிக்கைக்கும், உழைப்புக்கும் தடைபோட முடியவில்லை. சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு வானத்தை வசப்படுத்த உதவிய காரணங்கள் இன்றைக்கும்கூட பொருந்தக்கூடியவைதான். ஜேம்ஸ் வாட்டைப்போல தடைகளைக் கண்டு தயங்காமல் தன்னம்பிக்கையோடு உழைக்கும் எவருக்கும் எப்போதும் எந்த வானமும் வசப்படும். 

(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவன் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்! :-)

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள். மாணவன்

7 comments:

  1. ஜேம்ஸ் வாட்-டை பற்றிய நல்ல வரலாற்று தகவல் .. நன்றி மாணவன்

    ReplyDelete
  2. தொடர்ந்து அளித்து வரும் தகவல்களுக்கு நன்றி.. :)

    ReplyDelete
  3. Thanks for sharing such informations.. please continue to give us more and more interesting informations..

    தொடர்ந்து அளித்து வரும் தகவல்களுக்கு நன்றி

    ReplyDelete
  4. எப்பையும் போல் கலக்கல்..

    சத்தியமா இது டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் இல்லைன்னு சொன்னா.. நம்பவா போறீங்க.. :D

    ReplyDelete
  5. ஜேம்ஸ் வாட்டை பற்றிய பலஅரிய அறியாத தகவல்களை அறிந்து கொண்டேன்! வலைச்சரம் மூலம் உங்கள் அறிமுகம் கிடைத்தது இன்று . இந்த அறிமுகம் என்று தொடரும்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. உங்களை அறிமுகப்படுத்திய வரலாற்றுச் சுவடுகளுக்கு நன்றி.இத்தனை நாள் உங்கள் வலைப்பதிவு கண்ணில் படாமல் போனதற்கு வருந்துகிறேன் கூடிய சீக்கிரம்..ஒவ்வொன்றாக அனைத்தையும் படித்துவிடுவேன்.

    ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.