Showing posts with label William Harvey. Show all posts
Showing posts with label William Harvey. Show all posts

Thursday, April 18, 2013

வில்லியம் ஹார்வி - வரலாற்று நாயகர்!

"இதயம் துடிப்பது நின்றாலும் இரண்டு நிமிடம் உயிர் இருக்கும்...
அன்பே என்னை நீ நீங்கினால் ஒருகணம் என்னுயிர் தாங்காது"....

இந்த பாடல் வரிகளில் விஞ்ஞானம் பேசியிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. இதயம் துடிக்கும் வரைதான் உயிர் இருக்கும் என்பதும், இதயம் ஓயும்போது இரத்த ஓட்டம் நின்று போவதால் உயிரும் நின்று போகிறது என்பதும் அறிவியல் நமக்கு சொல்லும் உண்மை. ஆனால் நானூறு ஆண்டுகளுக்கு முன்புவரை அந்த உண்மை அறியப்படாத ஓர் ஆச்சரியமாக இருந்தது. அந்தக்காலகட்டத்தில் உயிரியல் வல்லுனர்கள்கூட இரத்த ஓட்டம் பற்றியும், இதயத்தின் செயல்பாடுகள் பற்றியும் தவறான எண்ணங்களை கொண்டிருந்தனர். உதாரணத்திற்கு நாம் உண்ணும் உணவு இதயத்தில் இரத்தமாக மாற்றப்படுகிறது என்றும், இதயம் இரத்தத்தை சூடாக்குகிறது என்றும், இரத்தநாளங்களில் காற்று நிரம்பியிருக்கிறது என்றும், இரத்தம் சிலசமயங்களில் இதயத்தை நோக்கியும், சிலசமயங்களில் இதயத்திலிருந்து வெளியேயும் பாய்கிறது என்றும் உண்மைக்கு மாறான கருத்துகளை கொண்டிருந்தனர். இதயம்தான் இரத்தத்தை உடல்முழுக்க பாய்ச்சுகிறது. இரத்தம் உடலிலேயே திரும்ப திரும்ப பயணிக்கிறது என்று முதன்முதலில் கண்டு சொன்னதன் மூலம் மருத்துவத்துறையின் தலையெழுத்தையே மாற்றி அமைத்த ஓர் அற்புத மருத்துவரை பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.